

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் பிரதான ஜாவா தீவில் நேற்று அதிகாலை நிகழ்ந்த பேருந்து விபத்தில் 16 பயணிகள் உயிரிழந்தனர்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து நாட்டின் பழமையான யோக்யகர்த்தா நகருக்கு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில் 34 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் மத்திய ஜாவாவின் செமராங் நகரில் உள்ள கிராப்யாக் கட்டணச் சாலையில் ஒரு வளைவில் அந்தப் பேருந்து திரும்பும்போது கான்கிரீட் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 6 பயணிகள் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். அருகில் உள்ள 2 மருத்துவமனைகளில் 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மத்திய ஜாவா காவல் துறை தலைவர் ரிபுத் ஹரி விபோவோ கூறும்போது, "விபத்துக்கு முன் அந்தப் பேருந்து மிக வேகத்தில் சென்றதாக நேரில் பார்த்த ஒருவர் கூறினார். விபத்தில் காயம் அடைந்த ஓட்டுநர் சிகிச்சையில் உள்ளார். அவரிடம் விசாரணை நடத்த உள்ளோம்” என்றார்.