இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - இடிபாடுகளில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு

ரிக்டரில் 7.7 ஆக பதிவு
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - இடிபாடுகளில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது.

பல்வேறு குட்டித் தீவுகளைக் கொண்ட தீவு தேசமான இந்தோனேசியாவில் இயற்கைச் சீற்றங்கள் அதிகம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் ஃப்ளோரஸ் தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அந்த பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அது திரும்பப் பெறப்பட்டது.

அந்த தீவின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தீவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கத்தால் ஆறு பேர் தீவிர காயமடைந்துள்ளனர். மேலும், இரண்டு பேர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு பேர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் அங்கு கட்டிடங்களும் சேதம் அடைந்துள்ளன. நிலநடுக்கம் உணரப்பட்டதும் உயரமான கட்டிடத்தின் மீது மக்கள் ஏறி உள்ளனர்.

கடந்த 1992-ல் இந்த தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி அலைகள் எழுந்தன. அதில் சுமார் 2,500 பேர் உயிரிழந்தனர். கடந்த 2004 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தோனேசியாவில் மிக மோசமான பாதிப்புகளை நிலநடுக்கம் ஏற்படுத்தியது.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - இடிபாடுகளில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் 600-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: நெடும் பயணத்தின் சுவையான தகவல்கள்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in