

பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப்
சியால்கோட்: வருங்காலங்களில் இந்தியா உடனான மோதல் எல்லையோரத்தில் இருக்காது. எங்கள் தாக்குதலை கொல்கத்தாவில் மேற்கொள்வோம் என பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா முன்னெடுத்தது. இதில் அந்த நாட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. அதற்கு பதிலடியாக இந்திய எல்லையோர மாநிலங்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி மேற்கொண்டது. அதை இந்திய பாதுகாப்பு படை இடைமறித்து அழித்தது.
இந்தச் சூழலில் சனிக்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப், “இந்தியா மீண்டும் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முயன்றால், இறைவனின் அருளால் நமது பதில் தாக்குதலை கொல்கத்தாவுக்கே கொண்டு செல்வோம். இந்த முறை நமது தாக்குதல் 200 அல்லது 250 கிலோமீட்டர் தூரம் என்ற அளவில் எல்லையோரத்தில் இருக்காது. அவரகளது பிராந்தியத்தில் நுழைந்து, அவர்களது வீட்டிலேயே தாக்குவோம்” என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவை அதன் கிழக்கு பகுதியில் தாக்குவோம் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இந்தியாவின் முன்னாள் தலைநகரான கொல்கத்தாவை தாக்குவோம் என கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையை நாங்கள் தாக்குவோம் என கடந்த மாதம் இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரி அப்துல் பாசித் தெரிவித்திருந்ததும் நினைவுகூரத்தக்கது.