

சுதான் குருங்
காத்மண்டு: நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை அடுத்து, நேபாள உள்துறை அமைச்சர் சுதான் குருங் இன்று (புதன்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மார்ச் 27 அன்று உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சுதான் குருங், ஒரு சர்ச்சைக்குரிய தொழிலதிபருடன் வணிகத் தொடர்புகள் மற்றும் பங்குப் பரிவர்த்தனைகள் வைத்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு பாரபட்சமற்ற விசாரணைக்கு வழிவகுப்பதற்காக பதவியை ராஜினாமா செய்ததாக அவர் கூறினார்.
ராஜினாமா குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘என்னைப் பொறுத்தவரை, பதவியை விட அறநெறியே மேலானது. மக்கள் நம்பிக்கையை விட பெரிய சக்தி எதுவும் இல்லை. நாட்டில் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் தற்போதைய ஜென் ஸி இயக்கமும் இந்தச் செய்தியைத் தெரிவித்துள்ளது.
நம் பொது வாழ்க்கை தூய்மையாக இருக்க வேண்டும். எனது 46 சகோதர சகோதரிகளின் ரத்தம் மற்றும் தியாகத்தின் மீது அமைக்கப்பட்ட அரசாங்கத்தை யாராவது கேள்வி கேட்டால், அதற்கான பதில் அறநெறிதான்’ என்று தெரிவித்தார்.
சுதான் குருங்கின் ராஜினாமாவை தொடர்ந்து, நேபாளத்தின் உள்துறை அமைச்சகப் பொறுப்பு இப்போது பிரதமர் பாலன் ஷாவிடம் உள்ளது.