

காத்மாண்டு: நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள காவல் துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், 299 இந்தியர்கள் மாயமானதாகவும், 21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீப் ஜெய்ஸ்வால் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், ஆகஸ்ட் 27 மதியம் 1 மணி நிலவரப்படி, 21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பட்டியலை வெளியிட்டுள்ளார்.
299 இந்தியர்கள் மாயம்: மேலும், வெளியுறவு அமைச்சக அறிக்கையில் 299 இந்தியர்கள் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத்தில் உள்ள 200 இந்தியர்கள் உதவி கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேபாளத்தின் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து தேவையான நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பதாகவும், இந்தக் கடினமான சூழலில் நேபாள அரசுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
73 பேர் நீர்மின் திட்டத்தில் பணியாற்றியவர்கள்:
299 இந்தியர்கள் மாயமான நிலையில், இவர்களில் 73 பேர் மத்திய நேபாளத்தின் திரிசூலி நீர்மின் திட்டத்தின் பணியாற்றியவர்களாவர் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட நீர்மின் திட்டப் பணிகளை மேற்கொண்டிருந்த நிறுவனத்துடன் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும், அங்கிருந்தவர்களின் நிலைமை பற்றி மேலதிக தகவலைப் பெற முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
நேபாளம் தேவ்கட் பகுதியில் காணாமல் போன உறவினர்களின் புகைப்படங்களுடன் அமர்ந்திருக்கும் மக்கள்
திரிசூலி நீர்மின் நிலையத் திட்டத்தில் இந்தியர்களுடன், நேபாளிகளும், தென் கொரியாவை சேர்ந்தவர்களும் பணியாற்றி வந்துள்ளனர்.
மொத்தம் 644 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை:
நேபாள சுற்றுலா தூறை அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நேபாள பெருவெள்ளத்துக்குப் பின்னர் 644 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை, இவர்களில் 517 பேர் வெளிநாட்டவர் என்று தெரிவித்துள்ளது. இதுதவிர 127 நேபாளிகளையும் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே, “திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 300 இந்தியர்கள் - இவர்களில் பெரும்பாலானோர் மானசரோவர் யாத்ரீகர்கள் - காணாமால் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களைத் தொடர்பு கொள்ள அரசாங்கம் முயன்று வருகிறது. வெளிநாட்டினரில் சுமார் 500 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை” என்று நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
37.5 டன் நிவாரணப் பொருட்கள்:
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்திய அரசு நேற்று 10 டன் நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் அனுப்பிவைத்த நிலையில் இன்று 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நேபாளத்துக்காக 37.5 டன் நிவாரணப் பொருட்கள், மருந்துகள், உணவுப் பொட்டலங்களை ஏற்றிக்கொண்டு இரண்டாவது விமானம் புறப்பட்டுள்ளது. இந்தியா, நேபாள அதிகாரிகளுடன் நெருங்கிய, தொடர்ச்சியான தொடர்பில் உள்ளது. நிவாரணப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து வலுவான ஆதரவை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிற்து.