

டோக்கியோ: வட ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள ஒரு துறைமுகத்தில் 80 சென்டிமீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை தாக்கியது.
உலகின் நில அதிர்வு அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்று ஜப்பான். சுமார் 12.5 கோடி மக்கள் வாழும் இந்தத் தீவுக்கூட்டத்தில், ஆண்டுதோறும் சுமார் 1,500 நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், ஜப்பானின் வடக்கு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகுகளாக பதிவானது. இதையடுத்து, கடற்கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நிலநடுக்கம் காரணமாக சுனாமி அலைகள் தாக்கி, சேதம் ஏற்படக்கூடும். எனவே, பொதுமக்கள் கடலோரப் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறி, உயரமான இடங்கள் அல்லது பாதுகாப்பான கட்டிடங்களுக்குச் செல்ல வேண்டும். சுனாமி அலைகள் மீண்டும் மீண்டும் வரக்கூடும் என்பதால், எச்சரிக்கை திரும்பப் பெறப்படும் வரை பாதுகாப்பான இடங்களை விட்டு வெளியேற வேண்டாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவாட் மாகாணத்தில் உள்ள குஜி துறைமுகத்தில் நேற்று மாலை 5:34 மணிக்கு 80 சென்டிமீட்டர் (31 அங்குலம்) உயரத்துக்கு சுனாமி அலை தாக்கியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக மாலை 5:32 மணிக்கு 70 சென்டிமீட்டர் உயரமுள்ள அலை தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேசிய ஒளிபரப்பு நிறுவனமான என்எச்கே வெளியிட்ட காட்சிகளில், இவாட் துறைமுகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உடனடி சேதங்கள் எதுவும் தென்படவில்லை.
பொதுமக்களுக்கு உதவுவதற்காக, பிரதமர் அலுவலகம் அவசரக்கால மேலாண்மைக் குழுவை அமைத்துள்ளது. பிரதமர் சானே டகாயிச்சி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், தயவுசெய்து உயரமான மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுங்கள். உயிர்ச்சேதம் அல்லது சொத்துசேதம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதாஎன்பதை ஆய்வு செய்து வருகிறோம்’’ என்றார்.