‘‘எஞ்சியிருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்’’ - ஈரானுக்கு ட்ரம்ப் அறிவுரை

‘‘எஞ்சியிருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்’’ - ஈரானுக்கு ட்ரம்ப் அறிவுரை
Updated on
2 min read

வாஷிங்டன் டி.சி. : ‘‘ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஈரான் ராணுவமும், அதன் ஆட்சியுடன் தொடர்புடையவர்களும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தங்கள் நாட்டில் எஞ்சி இருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம். ஏனெனில், அங்கு எஞ்சி இருப்பது மிகக் குறைவே’’ என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப். 28-ம் தேதி தாக்குதல்களைத் தொடங்கின. இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பது குறித்த செய்திகளை வெளியிடுவதை போலிச் செய்தி ஊடகங்கள் வெறுக்கின்றன. அமெரிக்க ராணுவத்தால் ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுவிட்டது; அது ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறது. ஆனால் அது நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான ஒப்பந்தம் அல்ல என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கை மீது தனக்கு இருக்கும் அதிருப்தியையும்” அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

ட்ரம்ப் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “முழு மத்திய கிழக்கையும் கைப்பற்றவும் இஸ்ரேலை முழுமையாக அழித்தொழிக்கவும் ஈரான் திட்டமிட்டிருந்தது. அந்த திட்டங்கள் அனைத்தும் ஈரானைப் போலவே இப்போது அழிந்துவிட்டன” என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக அவர் வெளியிட்ட ஒரு நீண்ட பதிவில், “சில நிமிடங்களுக்கு முன்பு எனது வழிகாட்டுதலின் பேரில் அமெரிக்க மத்திய கட்டளை (அமெரிக்க ராணுவம்), மத்திய கிழக்கின் வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் ஒன்றை செயல்படுத்தியது. ஈரானின் கிரீடமான கார்க் தீவில் உள்ள ஒவ்வொரு ராணுவ இலக்கையும் அது முற்றிலுமாக அழித்துவிட்டது. எங்கள் ஆயுதங்கள் உலகம் இதுவரை அறிந்திராத மிகவும் சக்திவாய்ந்தவை மற்றும் அதிநவீனமானவை. எனினும், கண்ணியம் கருதி, அந்த தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்பை நான் அழிக்க விரும்பவில்லை.

எனினும், ஈரான் அல்லது வேறு யாராவது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதில் தலையிட ஏதாவது செய்தால், இந்த முடிவை நான் உடனடியாக மறுபரிசீலனை செய்வேன்.

எனது முதல் பதவிக்காலத்தின்போது, அமெரிக்க ராணுவத்தை மிகவும் ஆபத்தான, சக்திவாய்ந்த, பயனுள்ள படையாக மீண்டும் கட்டியெழுப்பினேன். நாங்கள் தாக்க நினைக்கும் எதையும் பாதுகாக்கும் திறன் ஈரானுக்கு இல்லை. எங்கள் தாக்குதல்களுக்கு எதிராக அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது. அமெரிக்காவையோ, மத்திய கிழக்கையோ அல்லது உலகையோ அச்சுறுத்தும் திறன் அவர்களுக்கு இருக்காது. ஈரான் ராணுவமும், அதன் ஆட்சியுடன் தொடர்புடைய மற்ற அனைவரும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தங்கள் நாட்டில் எஞ்சி இருப்பதை காப்பாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம். அங்கு எஞ்சி இருப்பது அதிகம் இல்லை’’ என தெரிவித்துள்ளார்.

‘‘எஞ்சியிருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்’’ - ஈரானுக்கு ட்ரம்ப் அறிவுரை
ஈரான் உச்ச தலைவர் பற்றி தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டாலர் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in