

இஸ்லாமாபாத்: அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் இடையே கடந்த 11, 12-ம் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனினும் அமைதி முயற்சிக்காக காலவரையின்றி போர் நிறுத்தம் அமல் செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்து உள்ளார்.
இந்த சூழலில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழு நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் சென்றது. அங்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை ஈரான் அமைச்சர் அராக்சி நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தார், ராணுவ தளபதி அசிம் முனீர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதுகுறித்து ஈரான் அரசு வட்டாரங்கள் கூறும்போது, “அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம். எங்களது கோரிக்கைகள், நிபந்தனைகளை பாகிஸ்தான் தரப்பிடம் கூறியுள்ளோம். அவர்கள் அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வை காண முயற்சி செய்வார்கள்” என்று தெரிவித்தன.
இதனிடையே அமெரிக்க அரசின் சிறப்பு தூதர்கள் ஸ்டீவ் விட்காப், ஜெராட் குஷ்னர் ஆகியோர் விமானத்தில் இஸ்லாமாபாத் புறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மஸ்கட் மற்றும் ரஷ்யாவில் சுற்றுப் பயணம் செய்து அந்த நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார். அவரது ரஷ்ய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.