

ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப்படம்
மாஸ்கோ: “உலக நாடுகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையான கச்சா எண்ணெயை இந்தியா பெறுவதற்கான முழு சுதந்திரம் உள்ளது” என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா இனி ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்காது என அமெரிக்க தரப்பு தெரிவித்து வருகிறது. இத்தகைய சூழலில் இந்த விவகாரம் தொடர்பாக புதன்கிழமை அன்று ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது:
“இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருட்களை ரஷ்யா மட்டுமே தனியொரு தேசமாக விநியோகிக்கவில்லை. இதை ரஷ்யா உட்பட உலக அளவில் எண்ணெய் வளம் மிக்க சர்வதேச நாடுகள் நன்கு அறியும்.
ஏனெனில் இந்தியா பல்வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. அதனால் இதில் புதிது எதுவும் இல்லை என நாங்கள் பார்க்கிறோம். உலக நாடுகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையான கச்சா எண்ணெயை இந்தியா பெறுவதற்கான முழு சுதந்திரம் உள்ளது” என அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா திட்டவட்டம்: இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 18 சதவீதமாக குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார். இந்நிலையில், வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமெரிக்கா பார்க்கிறது. இதைத் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதில்லை என இந்தியா உறுதி அளித்துள்ளது.
மேலும், அமெரிக்கா, வெனிசுலா நாடுகளிடமிருந்து இனி கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும். ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெயை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல் அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யும் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
வெனிசுலாவிடமிருந்தும் இந்தியா, கச்சா எண்ணெயை வாங்க முடியும். இதனால் அமெரிக்க பொருளாதாரம் மேலும் பலன் அடையும். இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் இறுதி செய்துள்ளார். இதற்காக இந்தியப் பிரதமர் மோடியுடன் அவர் நேரடியாகவே பேசி உள்ளார்.
மேலும், அமெரிக்க எரிசக்தி, போக்குவரத்து மற்றும் விவசாயப் பொருட்களை வாங்குவதற்காக இந்தியா 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு செலவிடவுள்ளது என்றார்.