

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
துபாய்: ஈரானுடனான போரின் போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருடன் ரகசிய சந்திப்பை நடத்தினார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
‘சிங்கத்தின் கர்ஜனை' நடவடிக்கையின்போது, பிரதமர் நெதன்யாகு அமீரகத்துக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார் என்றும் அங்கு அவர், அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தார் என்றும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஈரானுடனான போரின்போது, இஸ்ரேல் தனது அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அவற்றை இயக்குவதற்கான பணியாளர்களையும் அமீரகத்துக்கு அனுப்பியதாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீ அறிவித்த ஒரு நாள் கழித்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹக்கபீயின் கருத்துகளை நேரடியாக உறுதிப்படுத்தாவிட்டாலும், இந்த பயணம் “இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான உறவுகளில் ஒரு வரலாற்று திருப்புமுனையை குறிக்கிறது" என்று நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரானுடனான போரின்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரவில்லை என்று அந்த நாடு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக யுஏஇ நாட்டின் செய்தி நிறுவனமான டபிள்யூஏஎம் இதுதொடர்பாக ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில் வெளிவந்துள்ள தகவலின்படி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, யுஏஇ-க்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலுடனான உறவுகள் வெளிப்படையானவை என்றும் அவை வெளிப்படையற்ற அல்லது அதிகாரப் பூர்வமற்ற ஏற்பாடுகளின் அடிப்படையில் அமைந்தவை அல்ல என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.