

நியூயார்க்: இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா ஆகியோருக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருந்தளித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க், மான்ஹாட்டன் உட்பட பல இடங்களுக்கு சார்லஸ் செல்கிறார். நியூயார்க் வரும் சார்லஸை, அதன் மேயர் ஜோரன் மம்தானி வரவேற்க வேண்டும். அப்போது அவரிடம், மன்னர் சார்லஸை சந்தித்து பேசினால், அவரிடம் என்ன கூறுவீர்கள் என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மம்தானி, ‘மன்னர் சார்லஸை தனியாக சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தால், கோஹினூர் வைரத்தை திருப்பி அளிக்கும்படி கூறுவேன்” என்றார். கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து ராணி விக்டோரியாவுக்கு, இந்தியாவின் சீக்கிய மன்னர் துலீப் சிங் கடந்த 1849-ம் ஆண்டு வழங்கினார்.
இது 105.6 கேரட் மதிப்புடையது. இதை இங்கிலாந்து ராணி கடந்த 1937-ம் ஆண்டு தனது கிரீடத்தில் பொருத்தி அணிந்தார். தற்போது இது லண்டன் டவரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இங்கிலாந்து ராணியிடம் சென்ற கோஹினூர் வைரத்தை திரும்ப பெறும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இதற்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில், இங்கிலாந்து மன்னர் சார்லஸை தனியாக சந்தித்து பேசினால், கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திரும்பத் தரும்படி கூறுவேன் என நியூயார்க் மேயர் மம்தானி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.