

மஜித் ஏவுகணை
டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் வான் பரப்பில் நேற்று முன்தினம் பறந்த அமெரிக்காவின் யு.எஸ். ஏ-10 வார்ஹோக், எப்-15இ ரகப் போர் விமானங்களை அந்த நாட்டு ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்கியது.
இதில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பறந்த ஏ-10 வார்ஹோக் போர் விமானம் ஈரான் வான் எல்லையைத் தாண்டி பெர்சிய வளைகுடா பகுதியில் விழுந்தது. அந்த போர் விமானத்தின் விமானி பாராசூட் மூலம் உயிர் தப்பினார்.
ஈரானின் தெற்குப் பகுதியில் பறந்த எப்-15இ ரகப் போர் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் பாராசூட் மூலம் உயிர் தப்பினர். இதில் ஒரு விமானி அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார். காணாமல் போன மற்றொரு விமானியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே அமெரிக்க விமானியை தேடும் பணியில் ஈரான் ராணுவமும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. அவரை கண்டுபிடித்து தரும் நபருக்கு 10 லட்சம் ரியால் (ரூ.55 லட்சம்) பரிசு வழங்கப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது: ஈரானின் வான் பாதுகாப்பு கவசங்களை அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் அழித்துவிட்டன. எனினும் மஜித் ஏவுகணை கட்டமைப்பை ஈரான் ராணுவம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இது வானில் 20 மீட்டர் முதல் 6 கி.மீ. உயரத்தில் பறக்கும் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களைத் தாக்கும் திறன் கொண்டவை.
இந்த ஏவுகணைகள் வாகனங்களில் பொருத்தப்பட்டு ஆங்காங்கே நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. வாகனத்தில் உள்ள கண்காணிப்புக் கருவியின் மூலம் குறைவான உயரத்தில் பறக்கும் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களைத் துல்லியமாக அடையாளம் காண முடியும்.
அமெரிக்காவின் ஏ-10 வார்ஹோக், எப்-15இ ரகப் போர் விமானங்கள், மஜித் ஏவுகணைகள் மூலமே சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளன. இந்த ஏவுகணைகள், ரேடார் அடிப்படையில் செயல்படாமல் வெப்பத்தின் மூலம் எதிரிகளின் இலக்குகளைக் கண்டறிந்து தாக்குகிறது. ரேடார் சிக்னலை வெளியிடாத ஏவுகணைகள் என்பதால் போர் விமானங்களால் இவற்றைக் கண்டறிவது மிகவும் கடினம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.