ஐரோப்பிய நாடுகளை வாட்டும் வெப்ப அலை - வெந்து தணியாத துயரமும் பின்புலமும்!

ஐரோப்பிய நாடுகளை வாட்டும் வெப்ப அலை - வெந்து தணியாத துயரமும் பின்புலமும்!
Updated on
3 min read

பாரிஸ், ரோம், மாட்ரிட், பெர்லின்... உலகின் முக்கிய நகரங்கள் இன்று ஒரு பொதுவான பிரச்சினையால் திணறிக் கொண்டிருக்கின்றன. அதுதான் மக்களை வாட்டி வதைக்கும் கடுமையான வெப்ப அலை!

ஜூன் மாதத்தின் இறுதியில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் கடுமையான வெப்ப அலையின் பிடியில் சிக்கியுள்ளன. வானிலை ஆய்வு நிறுவனங்களின் தரவுகளின்படி, சுமார் 38 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த வெப்ப அலையின் தாக்கத்தை நேரடியாக எதிர்கொண்டு வருகிறார்கள்.

இந்த வெப்ப அலையின் பின்னணியில் ‘ஒமேகா பிளாக்’ (Omega Block) எனப்படும் வளிமண்டல அமைப்பு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு உலகிலேயே வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டமாக ஐரோப்பா மாறிக்கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கை அளிக்கிறது.

வெப்பம் ஏன் வெளியேறவில்லை?

பொதுவாக ஜெட் ஸ்ட்ரீம் எனப்படும் வேகமான காற்றோட்டம், வானிலை அமைப்புகளை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு நகர்த்திக்கொண்டே இருக்கும். ஆனால் சில நேரங்களில் வளிமண்டலத்தில் உருவாகும் உயரழுத்த மண்டலம் ஒரு பகுதியிலேயே நிலைத்துவிடும். கிரேக்க எழுத்தான ‘Ω’ வடிவத்தை ஒத்திருப்பதால் இதற்கு ‘ஒமேகா பிளாக்’ என்று பெயர் வந்திருக்கிறது.

இந்த அமைப்பு உருவான பிறகு, குளிர்ந்த காற்றும் உள்ளே நுழைய முடியாமல், அதே நேரத்தில் உள்ளே இருக்கும் வெப்பமும் வெளியேற முடியாமல் சிக்கிக்கொள்ளும். இதன் விளைவாக ஒரு பெரிய வெப்ப வளையம் உருவாகி, பல நாட்கள் அல்லது வாரங்கள் வரை கடுமையான வெப்பம் நீடிக்கும்.

இந்த முறை வட ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில் இருந்து வந்த சூடான காற்று, ஐரோப்பாவின் மேல் உருவான இந்த வளிமண்டல அமைப்புக்குள் சிக்கிக்கொண்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி நிகழ்வது முதல் முறை அல்ல. ஏற்கெனவே ஐரோப்பா இதுபோன்ற வெப்ப அலைகளை சந்தித்திருக்கிறது. குறிப்பாக, 2003-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெப்ப அலை, நவீன ஐரோப்பிய வரலாற்றின் மிக மோசமான காலநிலை பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அந்த வெப்ப அலையில் சுமார் 70,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதன்பிறகு 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளிலும் கடுமையான வெப்ப அலைகள் பதிவாகின. 2022-ஆம் ஆண்டு மட்டும் ஐரோப்பாவில் 60,000-க்கும் அதிகமான வெப்பத்தின் காரணமான உயிரிழப்புகள் பதிவாகியதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

2026-ல் வெப்ப அலை மேலும் தீவிரமடைந்து, பல வெப்பநிலை சாதனைகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. பிரான்சின் சில பகுதிகளில் 44 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் ஜூன் மாத வெப்பநிலையின் முந்தைய பதிவுகளை கடந்து வருகின்றன.

2003-ன் நிழல்தான் 2026-ன் நிதர்சனமா?

2003-ல் ஐரோப்பாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வெப்ப அலை, பல தசாப்தங்களுக்கு ஒருமுறை நிகழக்கூடிய அரிய நிகழ்வாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.

காலநிலை ஆய்வாளர்களின் கணிப்பின்படி, தற்போதைய வெப்ப அலை போன்ற நிகழ்வுகள் மனிதனால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றத்தின் காரணமாக 100 முதல் 200 மடங்கு வரை அதிகரித்து காணப்படுகின்றன. 2003-ஐ விட தற்போதைய வெப்ப அலைகளில் பகல் நேர வெப்பநிலை சுமார் 3.5 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், இரவு நேர வெப்பநிலை 1.3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதன் பொருள் என்னவென்றால், பகலில் வெப்பத்துடன் போராடும் மனித உடலுக்கு இரவிலும் போதிய ஓய்வு கிடைப்பதில்லை என்பதே ஆகும்.

முன்னணியில் ஸ்பெயின்

இந்த வெப்ப அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று ஸ்பெயின். வெறும் நான்கு நாட்களுக்குள் 200-க்கும் அதிகமான உயிரிழப்புகள் வெப்பம் தொடர்பாக பதிவாகியுள்ளன.

பொதுவாக குளிர்ச்சியாக இருக்கும் வடக்குப் பகுதிகளில்கூட வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. வறட்சி, நீர்ப் பற்றாக்குறை மற்றும் காடுத்தீ அபாயம் ஆகியவை நாட்டை மேலும் சிக்கலுக்குள் தள்ளியுள்ளன.

ஒரு காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகக் கருதப்பட்ட பல பகுதிகள் இன்று வெப்ப எச்சரிக்கையின் பிடியில் சிக்கியுள்ளன.

பொது சுகாதார அவசரநிலையாக மாறியுள்ள பிரான்ஸ்

2026 வெப்ப அலையின் மையப்புள்ளியாக பிரான்ஸ் மாறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகள் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

தென்மேற்குப் பகுதியான பிஸோஸ் நகரில் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் நீர்நிலைகளை நாடிய நிலையில், பல உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

வெப்பத்தால் மின்சாரக் கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் இன்றியும் தவிக்கின்றனர். மேலும், கால்நடை மற்றும் கோழிப்பண்ணைகளிலும் பெரும் இழப்புகள் ஏற்பட்டதாக விவசாய அமைப்புகள் தெரிவிக்கின்றனர்.

வெப்பத்தின் பிடியில் இத்தாலி

ரோம், மிலன், புளோரன்ஸ், வெனிஸ் உள்ளிட்ட 16 முக்கிய நகரங்களுக்கு இத்தாலி அரசு மிக உயர்ந்த வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.

செயற்கைக்கோள் தரவுகளின்படி, ரோம் நகரின் தரைப்பரப்பு வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. சாலைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புகள் மீது இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.

மருத்துவமனைகளிலும் வெப்பம் தொடர்பான அவசர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘உலகிலேயே வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறுகிறதா ஐரோப்பா?’ என்ற கேள்வி இங்கே எழுகிறது.

காலநிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 1980-களிலிருந்து உலக சராசரியை விட இரு மடங்கு வேகத்தில் ஐரோப்பா வெப்பமடைந்து வருகிறது. இதனால்தான் விஞ்ஞானிகள் ஐரோப்பாவை ‘உலகிலேயே வேகமாக வெப்பமடையும் கண்டம்’ என்று குறிப்பிடுகின்றனர்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆர்க்டிக் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகுவது, சூரிய வெப்பத்தை பிரதிபலிக்கும் இயற்கை அமைப்புகள் குறைவது, வளிமண்டல மாற்றங்கள் ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

ஒரு காலத்தில் குளிர்காலங்களுக்காக அறியப்பட்ட ஐரோப்பா, இன்று வெப்ப அலைகளின் புதிய முகவரியாக மாறிக்கொண்டிருக்கிறது.

வெப்ப அலையின் மிகப் பெரிய ஆபத்து பகலில் அல்ல, இரவில்தான் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பகலில் அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும் உடல், இரவில் வெப்பநிலை குறைந்தால்தான் இயல்பு நிலைக்கு திரும்பும். ஆனால் தற்போது பல ஐரோப்பிய நகரங்களில் இரவிலும் வெப்பநிலை அதிகமாகவே உள்ளது.

இதனால் உடலுக்கு ஓய்வு கிடைப்பதில்லை. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், இதய நோயாளிகள் மற்றும் தனியாக வாழ்பவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். அதனால்தான் வெப்பத்தை பல சுகாதார அமைப்புகள் ‘அமைதியான கொலையாளி’ என்றும் குறிப்பிடுகின்றனர்.

வீடுகளே வெப்ப வலையாக மாறும் நிலை

இந்தியாவில் கோடைக்கால வெப்பம் என்பது புதிதானது அல்ல. அதனால் விசிறி, குளிர்சாதன வசதி போன்றவற்றுக்கு மக்கள் பழகியுள்ளனர். ஆனால், ஐரோப்பாவின் பெரும்பாலான வீடுகள் குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் கட்டப்பட்டவை. தடிமனான சுவர்கள் மற்றும் வெப்பத்தை உள்ளே தக்கவைக்கும் கட்டுமான முறைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். அதுவே தற்போதைய வெப்ப அலையின் பிரச்சினையாக மாறியுள்ளது. பல நாடுகளில் வீடுகளில் குளிர்சாதன வசதிகளும் பரவலாக இல்லை. இதனால் பல வீடுகள் வெப்பத்தை அடைத்து வைக்கும் வலையாகவும் மாறி வருகின்றன.

இந்தியாவுக்கான முன்னெச்சரிக்கைகயா?

இது ஐரோப்பாவின் பிரச்சினை மட்டுமல்ல. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவும் கடுமையான வெப்ப அலைகளை சந்தித்து வருகிறது. சென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் வெப்பநிலை உயர்வின் விளைவுகள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கைகள் வெளியாகி வருகின்றன. அதனால் ஐரோப்பாவின் தற்போதைய அனுபவம், எதிர்கால நகரத் திட்டமிடல், நீர்வள மேலாண்மை மற்றும் பொதுச் சுகாதாரத் தயாரிப்புகள் குறித்து உலக நாடுகள் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது.

இன்று ஐரோப்பாவைச் சுற்றிவளைத்துள்ள இந்த வெப்ப வளையம், ஒரு பருவநிலைச் செய்தி மட்டுமல்ல. காலநிலை மாற்றத்தின் தாக்கம் உலகின் எந்த மூலையையும் விட்டுவைக்காது என்பதற்கான எச்சரிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.

பாரிஸ், ரோம், மாட்ரிட் நகரங்களைச் சுட்டெரிக்கும் இந்த வெப்பம், நாளை உலகின் வேறு எந்த நகரத்தின் கதவையும் தட்டலாம்.

ஐரோப்பிய நாடுகளை வாட்டும் வெப்ப அலை - வெந்து தணியாத துயரமும் பின்புலமும்!
வினிசியஸ் ஜூனியர் ‘பிரேசில் நாயகன்’ ஆன கதை - கரவொலிகளில் மூழ்கிய அவமதிப்புக் குரல்கள்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in