

வினிசியஸ் ஜூனியர்
போட்டி முடிந்ததும் மைதானம் முழுவதும் வினிசியஸ் ஜூனியரின் பெயர் ஒலித்துக் கொண்டிருந்தது. ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து பிரேசிலை அடுத்தச் சுற்றுக்குக் கொண்டு சென்றிருந்தார். அவரை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த அந்த தருணத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு இதே வீரருக்கு எதிராக சில மைதானங்களில் அவமதிப்புக் குரல்கள் எழுந்ததை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. ஆனால, இன்று அந்தக் குரல்களை ரசிகர்களின் கரவொலிகள் மூழ்கடித்திருந்தன.
2000-ம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவுக்கு அருகிலுள்ள சாவோ கொன்சாலோ பகுதியில் வினிசியஸ் ஜூனியர் பிறந்தார். வறுமையும் சமூகப் பிரச்சினைகளும் நிறைந்த அந்தப் பகுதியில் வாழ்ந்த பல சிறுவர்களைப் போலவே அவருக்கும் கால்பந்துதான் பெரிய கனவாக இருந்தது. அவரது தந்தை ஒரு கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்து வந்த நிலையில் அவர் குடும்பத்தின் பொருளாதார நிலை வசதியானதாக அமையவில்லை. இருப்பினும் மகனின் கனவுக்கு குடும்பத்தினரும் முடிந்த அளவு ஆதரவாக நின்றனர்.
வறுமையில் தொடங்கிய கனவு
சிறுவயதிலேயே கால்பந்து மீது அதிக ஈர்ப்பு கொண்டிருந்த வினிசியஸ், ஃபுட்சால் போட்டிகளிலும் விளையாடினார். பின்னர் ஃபிளமெங்கோ கிளப்பின் பயிற்சி மையத்தில் இணைந்தார். பயிற்சிக்காக தினமும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதனால் சில காலம் தனது மாமாவின் வீட்டில் தங்கியிருந்தும் பயிற்சியைத் தொடர்ந்தார். ஒருநாள் பெரிய வீரராக வேண்டும் என்ற ஆசை மட்டுமே வினிசியஸை முன்னோக்கி நகர்த்தியது.
அவரது திறமை விரைவிலேயே கவனத்தை பெற்றது. அவரின் வேகம், பந்தைக் கட்டுப்படுத்துவது, எதிரணி வீரர்களைக் கடந்து செல்லும் திறன் ஆகியவை அவரை மற்ற விளையாட்டு வீரர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டியது. 16 வயதில் ஃபிளமெங்கோவின் சீனியர் அணிக்காக அறிமுகமானார். அதற்குப் பின் சில நாட்களுக்குள்ளே ஐரோப்பிய கால்பந்து உலகம் அவரைப் பற்றி பேசத் தொடங்கியது.
இடதுபுற விங்கராக விளையாடும் வினிசியஸ், தனது அதிவேக ஓட்டம், எதிரணி வீரர்களை ஏமாற்றும் டிரிப்ளிங் திறன் மற்றும் கோல் வாய்ப்புகளை உருவாக்கும் ஆட்டத்தால் கவனம் பெற்றார். ஒரு வீரரைத் தாண்டிச் செல்வது மட்டுமல்லாமல், போட்டியின் போக்கையே மாற்றும் திறன் கொண்ட வீரராக அவர் வளர்ந்தார். அதனால்தான் சிறுவயதிலேயே ஐரோப்பிய கிளப்களின் பார்வை அவர் மீது திரும்பியது.
அந்த நேரத்தில் பல முன்னணி ஐரோப்பிய அணிகள் அவரை கவனித்து வந்தன. அதில் ரியல் மாட்ரிட் முந்திக்கொண்டது. அப்போது 18 வயதைக் கூட எட்டாத ஓர் இளம் வீரருக்காக 45 மில்லியன் யூரோ செலவழித்து அவரை ஒப்பந்தம் செய்தது. இந்த நிகழ்வு பிரேசிலில் இருந்து வெளிநாட்டுக்குச் சென்ற இளம் வீரர்களுக்கான மிகப் பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது.
விமர்சனங்களையும் இனவெறியையும் வென்றவர்
ஆனால், திறமை மட்டுமே வெற்றியை உறுதி செய்வதில்லை. ஸ்பெயினுக்கு வந்த பிறகு வினிசியஸுற்கு முதல் சில ஆண்டுகள் கடினமானதாகவே அமைந்தது. வேகமாக ஓடவும், எதிரணி வீரர்களைக் கடந்து செல்லவும் முடிந்தது. ஆனால், கோல் அடிக்கும் தருணங்களில் தடுமாறினார் வினிசியஸ். சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் அதிகரிக்கத் தொடங்கின. சிலர் அவரை மிகைப்படுத்தப்பட்ட வீரர் என்றும், சிலர் ரியல் மாட்ரிட் செலவழித்த தொகையை கேள்விக்குறிதான் என்றும் கேளிக்கை செய்தனர்.
ஆனால், அந்த விமர்சனங்களுக்கு அவர் வார்த்தைகளால் பதில் சொல்லவில்லை. மாறாக, பயிற்சியில் அதிக நேரம் செலவிடத் தொடங்கி, தனது ஆட்டத்தை மேம்படுத்தினார். ஒரு காலத்தில் தவறவிட்ட வாய்ப்புகளுக்காக விமர்சிக்கப்பட்ட அதே வீரர்தான் பின்னர் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் வெற்றியைத் தீர்மானிக்கும் கோல்களை அடித்தார். அதுமட்டுமல்லாமல் ரியல் மாட்ரிட்டின் முக்கிய வீரர்களில் ஒருவராகவும் மாறி பின்னர் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக மதிக்கப்படவும் தொடங்கினார். கடந்த 2024-ஆம் ஆண்டு உலகின் சிறந்த ஆடவர் கால்பந்து வீரருக்கான ஃபிஃபா விருதையும் வென்றார்.
ஆனால், வினிசியஸின் வாழ்க்கையில் மிகக் கடினமான போட்டி கால்பந்து மைதானத்தில் நடந்ததல்ல. அது இனவெறிக்கு எதிரான போராட்டமாக தொடர்ந்தது. ஸ்பெயினில் பலமுறை ரசிகர்களின் ஒரு பகுதியிடமிருந்து இனவெறி தாக்குதல்களை அவர் எதிர்கொண்டார். சில போட்டிகளில் குரங்கு சத்தங்கள் எழுப்பப்பட்டன. வேறு சில இடங்களில் அவமானகரமான கோஷங்கள் முழங்கப்பட்டன. எந்த கால்பந்து வீரரும் எதிர்கொள்ளக் கூடாத சூழல்களை வினிசியஸ் எதிர்கொண்டார்.
2023-ஆம் ஆண்டு வலென்சியாவுக்கு எதிரான போட்டியில் நடந்த சம்பவம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. மைதானத்தில் எழுந்த இனவெறி கோஷங்களை நேரடியாக சுட்டிக்காட்டிய வினிசியஸ், அந்தப் பிரச்சினையை மறைக்காமல் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.
“பிரச்சினை என்னிடம் இல்லை... இனவெறியில்தான் இருக்கிறது” என்ற அவரது கருத்து உலகம் முழுவதும் பேசப்பட்டது. பலர் அமைதியாக இருந்திருக்கும் சூழலில், அவர் தனது குரலை பொதுவெளியில் உயர்த்தினார்.
அந்தப் போராட்டம் கால்பந்தைத் தாண்டியும் சென்றது. இனவெறிக்கு எதிராகப் பேசும் முக்கியமான குரல்களில் ஒருவராக வினிசியஸ்ஸின் குரல் ஒலித்தது. தன்னைத் தனிமைப்படுத்த முயன்ற சம்பவங்களே தன்னை மேலும் வலிமையாக்கியதாகவும் அவர் பின்னர் குறிப்பிட்டிருந்தார். கால்பந்து அவருக்கு புகழைக் கொடுத்திருக்கலாம்; ஆனால் போராடத் தெரிந்த மனநிலையே அவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டியது.
பிரேசிலின் புதிய நம்பிக்கை
கால்பந்துக்கு வெளியேயும் சமூகப் பணிகளில் அவர் கவனம் செலுத்துகிறார். 2021-ல் தொடங்கப்பட்ட ‘இன்ஸ்டிடியூட்டோ வினி ஜூனியர்’ அமைப்பின் மூலம் பிரேசிலில் பின்தங்கிய குழந்தைகளின் கல்விக்காகப் பணியாற்றி வருகிறார். தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் கல்வியை இணைத்து புதிய கற்றல் முறைகளை உருவாக்கும் முயற்சியும் செய்து வருகிறார். சிறுவயதில் வாய்ப்புகளுக்காக போராடிய வினிசியஸ், இன்று அதே வாய்ப்புகள் மற்ற குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டுமென அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
பிரேசில் கால்பந்து எப்போதும் ஒரு நட்சத்திரத்தைத் தேடிக்கொண்டே இருக்கும். பெலே, ரொனால்டோ, ரொனால்டின்யோ, நெய்மர் என ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு முகம் அந்த நாட்டின் அடையாளமாக இருந்திருக்கிறது. இன்று அந்த எதிர்பார்ப்பின் பார்வை வினிசியஸை நோக்கித் திரும்பியுள்ளது. ஒரு காலத்தில் ‘அடுத்த நெய்மர்’ என்று அழைக்கப்பட்ட வினிசியஸ், இன்று அந்த ஒப்பீடுகளைக் கடந்து தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்.
2026 உலகக் கோப்பை தொடரிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குரூப் போட்டிகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்திய அவர், ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து பிரேசிலின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றினார். ஒரு காலத்தில் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்பட்டவர், இன்று அந்த எதிர்பார்ப்புகளை நனவாக்கும் வீரராக உருவெடுத்துள்ளார்.
“அது சாத்தியமில்லை” என்று பலர் நினைத்த இடத்திலிருந்துதான் தனது பயணம் தொடங்கியதாக வினிசியஸ் பலமுறை நினைவுகூர்ந்திருக்கிறார். அந்தப் பயணம்தான் இன்று அவரை உலகக் கால்பந்தின் முன்னணி முகங்களில் ஒருவராக மாற்றியுள்ளது.
சாவோ கொன்சாலோவின் எளிய தெருக்களில் பந்தைத் துரத்திக்கொண்டிருந்த அந்தச் சிறுவன், இன்று உலகக் கோப்பை மேடையில் ஒரு நாட்டின் கனவுகளைச் சுமந்து ஓடிக்கொண்டிருக்கிறான்.
சில வீரர்கள் கோல்களாலும், கோப்பைகளாலும் நினைவில் நிற்பார்கள். ஆனால் வினிசியஸ் ஜூனியர், எந்தச் சூழலிலும் தலைகுனியாமல் போராடிய தனது பயணத்தால் நினைவில் நிற்கிறார்.