நேபாள முன்னாள் பிரதமர் ஒலி கைது: Gen Z போராட்டங்களை கொடூரமாக ஒடுக்க முயன்றதாக நடவடிக்கை

நேபாள முன்னாள் பிரதமர் ஒலி கைது: Gen Z போராட்டங்களை கொடூரமாக ஒடுக்க முயன்றதாக நடவடிக்கை
Updated on
2 min read

பக்தபூர்: கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ‘ஜென் ஸீ’ போராட்டங்களின் போது நிகழ்ந்த டஜன் கணக்கான உயிரிழப்புகளைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பாக நேபாளத்தின் முன்னாள் பிரதமரான கே.பி. சர்மா ஒலி, இன்று (மார்ச் 28, 2026) கைது செய்யப்பட்டார்.

நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்ற மறுநாளே, கடந்த ஆண்டு நடந்த ஜென் ஸீ போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த குற்றச்சாட்டின் பேரில், நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது செய்யப்பட்டார். பக்தபூர் மாவட்டத்தின் குண்டு பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து, நேபாள காவல்துறையினரால் ஒலி கைது செய்யப்பட்டார்.

சர்மா ஒலியுடன் சேர்த்து, முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகக்கும் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பேசிய காத்மண்டு பள்ளத்தாக்கு காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஓம் ஆதிகாரி, “அவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்; சட்டத்திற்கு உட்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்,” என்று கூறினார்.

ஒலி கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, புதிதாகப் பொறுப்பேற்ற உள்துறை அமைச்சர் சுதான் குருங், “கொடுத்த வாக்குறுதி என்பது வாக்குறுதியே. சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை. நாங்கள் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியையும், முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகக்கையும் கைது செய்துள்ளோம். இது எவருக்கும் எதிரான பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; இது நீதியின் தொடக்கம் மட்டுமே. இதன் மூலம் நாடு ஒரு புதிய திசையை நோக்கிப் பயணிக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

தனது கைது குறித்து ஊடகங்களிடம் தெரிவித்த சர்மா ஒலி, “பழிவாங்கும் நோக்கத்துடன் நான் கைது செய்யப்பட்டுள்ளேன். இதற்கு எதிராக நான் சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுப்பேன்,” என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு ஜென் ஸீ போராட்டத்தில், 19 இளைஞர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையின் காரணமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது. நாடு முழுவதும் பரவிய இப்போராட்டத்தில், நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இதன் காரணமாக, ஒலி தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்தது.

இதன் பின்னர் நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியான சுஷிலா கார்கி, இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தினார். அதன்பிறகு, ராப் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாலேந்திர ஷா, மார்ச் 5 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, நேற்று (மார்ச் 27) நேபாளப் பிரதமராகப் பதவியேற்றார்.

நேபாளத்தில் புதிதாக அமைந்த அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம், வெள்ளிக்கிழமையன்று பாலேந்திர ஷா தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேபாள முன்னாள் பிரதமர் ஒலி கைது: Gen Z போராட்டங்களை கொடூரமாக ஒடுக்க முயன்றதாக நடவடிக்கை
மினாப் பள்ளி மீது அமெரிக்காவின் தாக்குதல் போர்க்குற்றம்: ஈரான் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in