

கராகஸ்: வெனிசுலா நாட்டில் கடந்த வாரம் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1,500 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அங்கு இடிபாடுகளில் இருந்து 96 மணி நேரத்துக்கு பின் தந்தையும், மகனும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இது மீட்பு பணியில் சற்று நம்பிக்கை தந்துள்ளது.
தென் அமெரிக்க கண்டத்தில் வெனிசுலா அமைந்துள்ளது. அந்த நாட்டின் யாராகுய் மாகாணம், சான்பெலிப் நகரில் கடந்த புதன்கிழமை மாலை 6 மணி அளவில் (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 3.35 மணி) சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.2 ஆகப் பதிவானது.
அடுத்த 40 விநாடிகளில் யுமரே நகரில் 2-வது மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.5 ஆகப் பதிவானது. முதல் பூகம்பம் ஏற்பட்ட சான் பெலிப் நகரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் யுமரே நகர் அமைந்துள்ளது. பூகம்பம் காரணமாக அந்த நாட்டில் பல்வேறு நகரங்களில் உள்ள மக்களின் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. இதன் இடிபாடுகளில் சிக்கி சுமார் 1,500 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பூகம்பம் ஏற்பட்டு நான்கு நாட்கள் கடந்த நிலையில் அங்கு மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், வெனிசுலாவின் லா குய்ரா நகரில் பூகம்பம் ஏற்பட்ட சுமார் 96 மணி நேரத்துக்கு பிறகு இடிபாடுகளில் சிக்கி இருந்த தந்தை மற்றும் மகன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பணியை பிரான்ஸ் மற்றும் அமெரிக்க மீட்பு படையினர் மேற்கொண்டனர். இடிபாடுகளுக்குள் யாரேனும் உயிரோடு இருக்கிறார்களா என்பதை கண்டறிய பிரத்யேக கேமரா மற்றும் சிறப்பு கருவிகளை அவர்கள் பயன்படுத்தினர். அதன் மூலமாகவே மீட்கப்பட்ட தந்தை, மகனை அவர்கள் கண்டறிந்தனர்.
இடிபாடுகளில் சிக்கி இருந்த அவர்களை சுமார் 12 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு படையினர் மீட்டுள்ளனர். அவர்கள் இருவரும் நீர்ச்சத்தை இழந்த காரணத்தால் கடும் சோர்வாக காணப்பட்டனர். அவர்கள் இருவரும் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். இதற்கு முன்பு இடிபாடுகளில் இருந்து தாய் மற்றும் 9 மாத குழந்தையை மீட்பு படையினர் அங்கு மீட்டிருந்தனர்.