துபாய்: தமிழகத்தைச் சேர்ந்தவர் திலக் குமார் அனிருத்ராஜ். இவரது மனைவி ஷாமினி ரமேஷ். தமிழகத்தைச் சேர்ந்த இவர்கள், வேலைக்காக 8 ஆண்டுகளுக்கு முன் துபாய் சென்றனர்.
இந்நிலையில், மகன் குடும்பத்தை பார்க்க திலக் குமாரின் தாய் துபாய் சென்றுள்ளார். அங்கு இவருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டதால், துபாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இவரது மருத்துவ கட்டணம் ரூ.1.25 கோடியை தாண்டிவிட்டது.
தினசரி மருத்துவ கட்டணம் ரூ.4 லட்சம் உயர்வதால் அவரால் மருத்துவ கட்டணத்தை செலுத்த முடியவில்லை. தனது தாயை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க திலக் குமார் முடிவு செய்தார். ஆனால், ஆம்புலன்ஸ் விமானத்தில் இந்தியா அழைத்து வர ரூ.7 லட்சம் கட்டணம். ஆனால், தற்போதைய போர் சூழலில் ஆம்புலன்ஸ் விமான கட்டணமும் ரூ.50 லட்சமாகியுள்ளது. இதனால் துபாயில் உள்ள அறக்கட்டளையிடம் திலக் குடும்பத்தினர் உதவி கோரியுள்ளனர்.
இவர்களுக்கு நிதியுதவி கிடைத்தாலும், போர் சூழலில் ஆம்புலன்ஸ் விமானம் கிடைக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது. இந்த சூழலை சமாளிப்பது, உணர்வு ரீதியாகவும், நிதி ரீதியாகவும் மிகவும் கடினமாக உள்ளது என்கிறார் ஷாமினி.