ஈரானில் கைதானோருக்கு மரண தண்டனை: நீதித் துறை தலைவர் எச்சரிக்கை
டெஹ்ரான்: ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களில் இதுவரை 2,572 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கைதானவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்பிருப்பதாக நீதித் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த டிசம்பர் 28-ம் தேதி தலைநகர் டெஹ்ரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. மதத் தலைவர் காமேனி, அதிபர் மசூத் பெசேஸ்கியான் பதவி விலக வலியுறுத்தி நடைபெறும் இந்தப் போராட்டம், நாடு முழுவதும் பரவி உள்ளது. பல்வேறு அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே போராட்டத்தை ஒடுக்க ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை 2,572 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவு அதிகம் என கூறப்படுகிறது.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்படும் என்று ஈரானின் நீதித்துறை தலைவர் கோலம்ஹொசைன் மோசேனி-எஜெய், சூசகமாக தெரிவித்துள்ளார். தண்டனைகளை தாமதப்படுத்துவது அதன் தாக்கத்தைக் குறைத்துவிடும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் இந்த அறிவிப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில், “ஈரான் அரசு போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றினால், அமெரிக்கா மிக வலுவான நடவடிக்கையை எடுக்கும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஈரானுடன் இனி எந்த பேச்சுவார்த்தையும் இல்லை” என பதிவிட்டுள்ளார்.
இந்திய தூதரகம் எச்சரிக்கை: டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஈரான் மீது அமெரிக்க படைகள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம். எனவே, அங்கு இருக்கும் இந்தியர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். போராட்டம் நடை பெறும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
