அமைதிக்கான நோபல் பரிசை அதிபர் ட்ரம்புக்கு மச்சாடோ வழங்கியதால் சர்ச்சை
வாஷிங்டன்: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தனக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டது.
வெனிசுலா முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சிக் காலத்தில் மச்சாடோ தலைமறைவாக இருந்தார். இதன் காரணமாக நார்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற விழாவில் மச்சாடோ சார்பில் அவரது மகள் அனா கொரினா நோபல் பரிசை பெற்றுக் கொண்டார்.
உலகம் முழுவதும் 8 போர்களை நிறுத்தியதாக கூறிவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று மிகவும் எதிர்பார்த்திருந்தார். ஆனால் மச்சாடோவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார்.
இதுகுறித்து மச்சாடோ கூறும்போது, தனக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். இதனிடையே கடந்த 3-ம் தேதி வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தி அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து, நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மச்சாடோ கூறும்போது, “எனக்கான நோபல் பரிசை அதிபர் ட்ரம்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்" என்று அறிவித்தார்.
இந்தச் சூழலில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு நேற்று முன்தினம் சென்ற மச்சாடோ, அதிபர் ட்ரம்பை சந்தித்து தனக்கான நோபல் பரிசை வழங்கினார்.
இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மரியா கொரினா மச்சாடோவை சந்தித்ததை மிகவும் பெருமையாக கருதுகிறேன். அவர் மிகச் சிறந்த பெண். எனது பணிகளை பாராட்டி நோபல் பரிசை அவர் எனக்கு வழங்கினார். மரியா கொரினா மச்சாடோவுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நோபல் கமிட்டி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஒருவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டால், அதை யாராலும் மாற்ற முடியாது. நோபல் பரிசை யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது. யாருக்கும் தானமாகவோ, பரிசாகவோ வழங்க முடியாது. ஒருவேளை பதக்கம் கைமாறலாம். நாங்கள் அறிவித்த நபரே நோபல் பரிசின் உண்மையான உரிமைதாரர்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
