

கராகஸ்: வெனிசுலாவின் வான் பரப்பை கண்காணிக்க சீன ரேடார்கள் நிறுவப்பட்டு உள்ளன. ஆனால் அந்த நாட்டில் அமெரிக்க போர் விமானங்கள் நுழைந்தபோது சீன ரேடார்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே 7 முதல் 10-ம் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. பாகிஸ்தானின் வான் பரப்பை கண்காணிக்க சீனாவின் அதிநவீன ரேடார்கள் நிறுவப்பட்டு இருந்தன. ஆனால் ஆபரேஷன் சிந்தூரின் போது சீன ரேடார்களை தாண்டி இந்திய போர் விமானங்கள் வெற்றிகரமாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தின. இதன் காரணமாக சீனாவின் ஆயுத ஏற்றுமதி கணிசமாக குறைந்து வருகிறது.
வெனிசுலாவிலும் தோல்வி: கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெனிசுலாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சீனா, வெனிசுலாவில் கால் பதித்தது.
வெனிசுலாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்த சீனா, அதற்கு ஈடாக அந்த நாட்டுக்கு ஏராளமான ஆயுதங்களை ஏற்றுமதி செய்தது. குறிப்பாக வெனிசுலா நாட்டின் வான் பாதுகாப்புக்காக சீனாவின் அதிநவீன ஜேஒய்-27 ரக ரேடார்கள் நிறுவப்பட்டன. அதோடு எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்க சீனாவின் எச்கியூ-9 ரக ஏவுகணைகள் வெனிசுலாவின் எல்லைப் பகுதிகளில் நிறுவப்பட்டு இருந்தன.
சீனாவின் 20 கே-8 கரகோரம் போர் விமானங்கள், ஒய்-பிஎப் 100 ரக சரக்கு- போர் விமானங்கள், எல்-15 பால்கன் பயிற்சி போர் விமானங்கள், 100 விஎன் 4 ரக கவச வாகனங்கள் உள்ளிட்டவை வெனிசுலாவின் ராணுவம், விமானப் படையில் இடம்பெற்று உள்ளன.
ஆனால் கடந்த 3-ம் தேதி அமெரிக்காவின் 150 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வெனிசுலா எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தன. இந்த போர் விமானங்களை சீன ரேடார்களால் முன்கூட்டியே கண்டறிய முடியவில்லை. மேலும் சீனாவின் வான் தடுப்பு ஏவுகணைகளாலும் அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்த முடியவில்லை. அமெரிக்க போர் விமானங்களுக்கு சிறு பாதிப்புகூட ஏற்படாமல் பத்திரமாக நாடு திரும்பி உள்ளன.
இது குறித்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறும்போது, “இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீன ஆயுதங்கள் பெரும் தோல்வியை சந்தித்தன. தற்போது வெனிசுலா நாட்டிலும் அமெரிக்க ராணுவத்திடம் சீன ஆயுதங்கள் மீண்டும் தோல்வியை சந்தித்து உள்ளன. இது சர்வதேச அளவில் சீனாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது” என்று தெரிவித்தனர்.