ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா கடற்படை கப்பல்
வாஷிங்டன்: ஏவுகணைகள் தயாரிக்க உதவும் ரசாயனங்களை ஈரானுக்கு சீனா அனுப்பியுள்ளது என்று அமெரிக்காவிலுள்ள குடியரசுக் கட்சியின் நிர்வாகி நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி யில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராக பணியாற்றியவரும், தற்போது அதிபர் டொனால்டு ட்ரம்ப் சார்ந்த குடியரசு கட்சியின் நிர்வாகியுமான நிக்கில ஹாலே எக்ஸ் சமூக வலைதளத்தில் சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: சிறை பிடிக்கப்பட்ட கப்பலில் இருந்து ஏவுகணைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மிக முக்கியமான ரசாயனங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது சீனாவிலிருந்து ஈரானுக்கு ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டவை. இதுதொடர்பான சில புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளேன்.
ஈரான் தனது ரகசியத் திட்டங்களை மறைப்பதற்காக சீனாவைப் பயன்படுத்திக் கொள்கிறதா என்ற கேள்வி எழுகிறது. கப்பலில் இருந்த ரசாயனப் பொருட்கள் சீன நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டதற்கான முத்திரைகள் இருக்கின்றன. இதன் மூலம் உலக நாடுகளை ஈரான் ஏமாற்றி வருகிறது.
ஈரானின் இந்த நடவடிக்கை அணுசக்தி ஒப்பந்தத்தை மீறுவது மட்டுமல்லாமல், உலக அமைதிக்கே ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஈரான் தனது ஏவுகணைத் திட்டத்தை வலுப்படுத்தி வருவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த அதிரடி சோதனை மற்றும் கப்பல் சிறைபிடிப்பு நடவடிக்கைக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நிக்கி ஹாலேயின் இந்த அறிவிப்பு ஈரான் நாட்டுக்கு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
அதேநேரத்தில், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் முற்றிலும் மறுத்துள்ளது. அமெரிக்கா திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருவதாகவும், அந்தக் கப்பலில் சாதாரணமான வணிகப் பொருட்கள் மட்டுமே இருந்ததாகவும் ஈரான் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. நிக்கி ஹாலேவின் கூற்றுக்கு சீன நாடும் மறுப்பு தெரிவித்துள்ளது.