

டோக்கியோ: ஜப்பானில் ஒரு வாரத்துக்குள் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும், சுனாமி ஆபத்தும் ஏற்படலாம் என்றும் ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பான் நாட்டின் வட கடலோரப் பகுதிகளான ஹொக்காய்டோ, ஹொன்ஷு தீவுகளில் கடந்த திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக பதிவானது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல சுனாமி எதுவும் வரவில்லை. ஆனால், நிலநடுக்கத்தால் 34 பேர் காயமடைந்தனர்.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 2 நாட்கள் மட்டுமேஆன நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்குள் ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும், பயங்கரமான சுனாமி பேரலைத் தாக்குதல் நிகழலாம் என்றும் ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்படும்போது, 98 அடி உயர சுனாமி அலைகள் ஜப்பானின் கடலில் எழ வாய்ப்பிருப்பதாகவும், இதனால் 2 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2011-ல் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டு 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சுனாமி பேரலை காரணமாக புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.