

கனடா பிரதமர் மார்க் கார்னி
ஒட்டாவா: கடந்த வெள்ளிக்கிழமை இரவு விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பாக, ஓர் உடன்பாட்டை எட்டத் தவறியதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை, கனடா பிரதமர் மார்க் கார்னி நிறுத்தி வைத்துள்ளார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 28 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு இன்று நள்ளிரவு முதல் 50% வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, இருநாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பேச்சுவார்த்தையை கனடா நிறுத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து, கனடா பிரதமர் மார்க் கார்னி கூறுகையில், “கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 28 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு இன்று நள்ளிரவு முதல் 50% வரி விதிக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. கனடா தொழிலாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைப் பாதுகாக்க, அமெரிக்கப் பொருட்களுக்கு அதே அளவில் பதிலடி வரி விதிக்கப்படும்.
புதிய வரிகளைத் தவிர்த்து, வர்த்தக உடன்பாட்டை எட்டும் நோக்கில் இரு நாடுகளும் வாஷிங்டனில் கடந்த மூன்று நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதில் முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், கனடாவின் இலக்குகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இறுதி உடன்பாடு ஏற்படவில்லை. இதன் விளைவாக, அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளேன். பேச்சுவார்த்தைக் குழுவினர் ஒட்டாவாவுக்குத் திரும்புமாறு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
ஆனால், பேச்சுவார்த்தை முறிந்ததற்கு வேறுபட்ட விளக்கத்தை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் அளித்தார். அவர் கூறுகையில், “உடன்பாடு ஏற்படுவதற்கான முன்னேற்றம் இருந்தபோதிலும், பேச்சுவார்த்தையிலிருந்து கனடா விலகிவிட்டது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் கனடாவுக்கு மிகச் சாதகமான வர்த்தகச் சலுகைகளை வழங்க வாஷிங்டன் முன்வந்தது. ஆனால், கனடா தரப்பில் புதிதாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஏற்கனவே அளித்திருந்த உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்கிய நடவடிக்கைகள், பேச்சுவார்த்தையில் ஏற்பட்டிருந்த சமநிலையை சீர்குலைத்தன.
கனடா தரப்பில் அமெரிக்கா ஏற்க முடியாத அளவுக்கு கூடுதல் சலுகைகள் கோரப்பட்டன. குறிப்பாக, வாகனங்கள், எஃகு, அலுமினியம் மற்றும் மரப்பொருட்கள் துறைகளில் கனடா கூடுதல் சலுகைகளை எதிர்பார்த்தது. புதிய அமெரிக்க வரிகளுக்கு கனடா பதிலடி கொடுத்தால், மீண்டும் வர்த்தகச் சமநிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பரிந்துரைகள் வழங்கப்படும்” என எச்சரித்தார்.
இதற்கிடையே, குறிப்பிட்ட கனடா பொருட்களுக்கான புதிய வரிகள் நேற்று அதிகாலை 12.01 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பேச்சுவார்த்தை முறிந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் வர்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ளது.