

தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிபொருளுடன் சென்ற மூன்று சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை பிரிட்டிஷ் ராணுவம் உறுதி செய்துள்ளது.
இந்த அண்மைய தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் சரக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளுக்கு தேவையான எரிபொருள் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்புவது பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து இருந்தது. இந்நிலையில், இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து இயல்பானது.
இந்த சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடந்ததாக பிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் கப்பல் போக்குவரத்தை கண்காணித்து வரும் அந்நாட்டு கடற்படை இந்த தாக்குதலை உறுதி செய்துள்ளது. கத்தாரில் இருந்து எல்என்ஜி எரிபொருள் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு சென்ற கப்பல் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. இதோடு மற்றொரு கப்பல் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும். எண்ணெய் அல்லது எரிபொருள் கசிவு மாதிரியான மாசுபாடு ஏதும் இல்லையென்றும் பிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென்றும் பிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது கத்தார் குற்றச்சாட்டு
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற தங்கள் நாட்டின் எல்என்ஜி சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கத்தார் குற்றச்சாட்டு வைத்துள்ளது. ட்ரோன் மூலம் நடைபெற்ற இந்த தாக்குதலில் என்ஜின் அறையில் தீ பற்றியதாக தெரிவிக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் இல்லை என்றும், கப்பலில் இருந்து ஊழியர்களை வெளியேற்றும் பணி நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலின் கேப்டன் தாக்குதலுக்கு பிறகு ‘மே-டே’ எச்சரிக்கை கொடுத்துள்ளார். அதையடுத்து இந்த தாக்குதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.