

மாயமான எம்.ஹெச்.370-ல் தனது சகோதரரை இழந்த ஆஸ்திரேலியா பெண், உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்.ஹெச்.17 விமானத்தில் தனது வளர்ப்பு மகளை பறிகொடுத்தது மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடுவானில் காணாமல் போன மலேசிய விமானம் எம்.ஹெச்.370-ல் கைலேன் மன் என்பவரின் சகோதரரும், அவரது மனைவியும் இருந்தனர். அவர்களை இழந்துவிட்ட அதிர்ச்சியில் இருந்து முழுமையாக மீள்வதற்குள், உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதலுக்கு எம்.ஹெச்.17 விமானம் உள்ளானது என்ற தகவல் மீளாத் துயரத்தைத் தந்துள்ளது.
உக்ரைனில் நொறுங்கி விழுந்த அந்த மலேசிய விமானத்தில்தான் கைலேன் மன்னின் வளர்ப்பு மகள் மாரே ரிஸ்க் பயணித்திருக்கிறார். அந்த விமானத்தில் உயிரிழந்த 297 பேரில் அவரும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.
"நாங்கள் மீண்டும் எங்கள் தைரியத்தை இழந்திருக்கிறோம்" என்று மன்னின் மற்றொரு சகோதரரான க்ரேக் புர்ரோஸ் வருத்தத்துடன் பேசினார்.
மேலும், "தங்களது குடும்பம் துரதிஷ்டவசமாக எப்படி இரு கொடூரமான சம்பவங்களில் சிக்கியது என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறோம்" என்றார் அவர். "சமீபத்தில்தான் அவர் தனது சகோதரரை இழந்தார்... இப்போது வளர்ப்பு மகள்..." என்று தழும்பும் குரலில் கூறினார்.
மன்னின் வளர்ப்பு மகள் ரிஸ்க்கும், அவரது கணவர் அல்பர்டும் தங்களது நான்கு வாரச் சுற்றுலாவை முடித்துவிட்டு ஐரோப்பாவிலிருந்து அந்த விமானத்தில் சொந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த மிகப் பெரிய சோகம் ஏற்பட்டது.
இதுகுறித்து, அவர்களின் குடும்ப நண்பர் ஃப்ல் லித்கோவ் கூறுகையில், "அவர்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களைப் பற்றி ஒரு அவதூறு வார்த்தையைக்கூட கேட்க முடியாது" என்றார்.