Published : 31 Jan 2023 10:01 AM
Last Updated : 31 Jan 2023 10:01 AM

ஃப்ளோரிடா துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயம்: ஜனவரியில் மட்டும் அமெரிக்காவில் 3 சம்பவங்கள்

ஃப்ளோரிடா: அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். சம்பவம் ஃப்ளோரிடாவின் ப்ளம் நகரில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.43 மணிக்கு நடந்துள்ளது.

இதனை லேக்லேண்ட் காவல்துறை உறுதி செய்துள்ளது. போலீஸ் விசாரணையின்படி சம்பவ இடத்தில் நின்றிருந்த ஒரு நீல நிற காரில் இருந்த 4 பேர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அந்தக் காரின் 4 ஜன்னல்களும் ஒரே நேரத்தில் இறக்கிவிடப்பட்டு துப்பாக்கிச் சூடு ஒரே நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது. ஆண்களைக் குறிவைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் நிகழ்விடத்திலிருந்து அந்தக் கார் வேகமாக சென்றுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய அந்தக் காரை தேடி வருவதாக லேக்லேண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒரே மாதத்தில் 3 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்: கடந்த ஜன.21 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 23 ஆம் தேதி அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியா, அயோவா, சான் பிரான்சிஸ்கோ உள்பட 3 இடங்களில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 2 மாணவகள் உள்பட 9 பேர் பலியாகினர். தற்போது ஃப்ளோரிடாவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் 9 பேர் காயமடைந்துள்ளனர். 2023 ஆம் வருடம் தொடங்கி ஒரே மாதத்தில் 3 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

647 மாஸ் ஷூட்டிங்: அமெரிக்காவில் கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 647 மாஸ் ஷூட்டிங் சம்பவங்கள் நடந்துள்ளன. துப்பாக்கி வன்முறை ஆவண காப்பக தகவலின்படி 2022ல் அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி சூட்டில் மட்டும் 44 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் தற்கொலையால் இறந்தவர்களாவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x