Published : 25 Jan 2023 01:51 PM
Last Updated : 25 Jan 2023 01:51 PM

ஆப்கனில் பெண் கல்விக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்: ஐநா

ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் | கோப்புப் படம்

நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்களை ஐநா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசும்போது, “கல்வி பயில்வதைத் தடுக்கும் அனைத்து பாரபட்சமான சட்டங்களையும், நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது. குறிப்பாக ஆப்கனிஸ்தானில் இடைநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பெண்கள் கல்வி பயில்வதற்கு விதிக்கப்பட்டுள்ள மூர்க்கத்தனமான தடையை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி தினத்தின் கருப்பொருள், 'கல்விக்கு முன்னுரிமை கொடுங்கள்' என்பதே” என்றார். ஆப்கானிஸ்தானில் சுமார் 80% சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அவர்கள் அறிவித்தனர். எனினும், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது என்றும், பெண் கல்வி; பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், பெண்களின் உரிமையை தொடர்ந்து பறிக்கும் செயல்களில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x