ஊட்டசத்து குறைப்பாட்டால் குழந்தை உயிரிழப்பு: அமெரிக்காவில் ‘வீகன்’ தாய்க்கு ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஷீலா
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஷீலா
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்காவில் ’வீகன்’ உணவு முறையை அதி தீவிரமாக பின்பற்றியதன் விளைவாக, ஊட்டசத்து குறைபாட்டால் குழந்தை மரணித்த வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஷீலா ஓ லெரி, ரைய் இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள். ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கோரலில் வசித்த இந்த தம்பதியினர் கடந்த சில ஆண்டுகளாகவே வீகன் உணவுப் பழக்கத்தை குடும்பத்தில் கடுமையாக நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர். தங்களுடைய கடைசி குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்டினாலும், பச்சைப் பழங்கள், பச்சை காய்கறிகளையே உணவாக அளித்துள்ளனர். இதில், 18 மாத வயதுள்ள எஸ்ரா என்ற அந்த ஆண் குழந்தை ஊட்டச்சத்து குறைப்பாட்டால் மூச்சுத் திணறி 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்தது.

அந்தக் குழந்தை இறந்தபோது ஏழு மாத குழந்தையின் அளவில் இருந்ததாக போலீஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால், மாம்பழம், ஆப்பிள் போன்றவற்றையே பெற்றோர் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில்தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கடுமையான வீகன் உணவு முறைக்கு பழக்கப்படுத்தியுள்ளனர் எனத் தெரிய வந்தது. இதன் காரணமாக தம்பதிகளின் இறந்த குழந்தை உட்பட பிற குழந்தைகளும் ஊட்டசத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், குழந்தைகள் ஆரோக்கியமற்ற நிலையிலும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தம்பதிகள் இருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் தாய் ஷீலாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டது. தீர்ப்பு வாசித்தபோது ஷீலா முகத்தில் எந்த உணர்வும் வெளிப்படவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in