ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 280 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 280 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்
Updated on
1 min read

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் 280-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் உள்பகுதி கிராமங்களிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பக்டிகா மாகாணத்தில்தான் பெரும்பாலான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாகாணத்தில் மட்டும் 250 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் வீடுகளும் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளை சிக்கியவர்களை மீட்கும் பணி விரைவாக நடந்து வருகிறது.

பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக நிவராண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பலியானவர்கள். இந்த நிலையில், மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆப்கனில் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in