ஆப்கனில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள்; 9 பேர் பலி: ஐஎஸ் பொறுப்பேற்பு

ஆப்கனில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள்; 9 பேர் பலி: ஐஎஸ் பொறுப்பேற்பு

Published on

காபூல்: ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 9 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள பார்க் மாகாணத்தின் தலைநகர் மசார்-இ-ஷரிபில் வியாழக்கிழமை இரண்டு வாகனங்களை குறிவைத்து அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் 9 பேர் பலியாகினர் . பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐஎஸ் அமைப்பினர் இதில் 30 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் அமர்ந்தது முதல் நாட்டில் குண்டுவெடிப்பு, தற்கொலைப்படை தாக்குதல்களை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் மசார்-இ-ஷரிப் மசூதியில் ஐஎஸ் தீவிரவாதிகளால் பயங்கர குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த நிலையில் இந்தத் தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.

ஆப்கனில் தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தி வருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in