பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிப்பு: விரைவில் தேர்தல்: இம்ரான் கான் அறிவிப்பு

பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிப்பு: விரைவில் தேர்தல்: இம்ரான் கான் அறிவிப்பு
Updated on
2 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்ட நிலையில் விரைவில் புதிதாக தேர்தல் நடைபெறும் என பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவத்துக்கும் ஒதுக்கீடு குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது வரும், 28-ம் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது. இம்ரான் கானுக்கு தற்போது சொந்த கட்சி எம்.பி.களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஜா ரியாஸ், நுார் ஆலம் கான் உள்ளிட்ட 22 எம்.பி.க்கள் பிரதமர் இம்ரான் கான் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

பாகிஸ்தானில் மொத்தமுள்ள 342 எம்.பி.க்களில், 172 பேரின் ஆதரவு தேவை. ஆனால் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்.பி.க்கள் உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு பிற கட்சிகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. இதில் 24 பேர் அரசு மீது அதிருப்தியடைந்துள்ளனர். இவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அரசு கவிழ்ந்துவிடும் ஆபத்து உள்ளது.

இந்தநிலையில் புதிய திருப்பமாக ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா உள்ளிட்ட நான்கு மூத்த பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் பாகிஸ்தான் பிரதமரை ராஜினாமா செய்யுமாறு கூறியதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்ரான் கான் சார்பாக ராணுவத்துடன் மத்தியஸ்தம் செய்ய முயற்சி நடைபெற்றது. ஆனால் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மொத்தமுள்ள 342 எம்.பி.க்களில், 172 பேரின் ஆதரவு தேவை. ஆனால் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்.பி.க்கள் உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு பிற கட்சிகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. இதில் 24 பேர் அரசு மீது அதிருப்தியடைந்துள்ளனர். இவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அரசு கவிழ்ந்துவிடும் ஆபத்து இருந்தது.

இந்நிலையில் இம்ரான் கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட்- பாகிஸ்தான் கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இந்த பரபரப்பான சூழலில் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை துணை சபாநாயகர் நிராகரித்தார், இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று அவர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து புதிதாக தேர்தல் நடைபெறும் என பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறுகையில் ‘‘நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அதிபருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தலுக்கு தயாராகுமாறு பாகிஸ்தான் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்,’’ எனக் கூறினார்.

இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பை நிராகரித்த துணை சபாநாயகரின் முடிவை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in