போர், தீவிரவாதம் ஒருபோதும் ஓய்வதில்லை: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கருத்து

போர், தீவிரவாதம் ஒருபோதும் ஓய்வதில்லை: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கருத்து

Published on

போர், தீவிரவாதம், பிரிவினை வாதம் ஆகியவை ஒருபோதும் ஓய்வதில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

கடந்த 1999-களில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராக ஒபாமா பணியாற்றினார். அந்த பல்கலைக்கழக சட்டக் கல்லூரி மாணவர்களுடன் நேற்று முன்தினம் அவர் கலந்துரையாடினார்.

அப்போது சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்க ராணுவம் நடத்தும் தாக்குதல் குறித்து ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒபாமா அளித்த பதில் வருமாறு:

போர், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை ஒருபோதும் ஓய்வதில்லை. அவற்றை கட்டுப்படுத்தவே ராணுவ பலத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களில் சில நேரங்களில் அப்பாவிகளும் உயிரிழப்பது உண்மைதான். ஆனால் முடிந்தவரை அப்பாவி பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரு நல்ல சமுதாயம் உருவாக மக்களின் மனநிலையில் மாற்றம் உருவாக வேண்டும். அப்போது தான் அந்த நாட்டில் மாற்றம் உருவாகும். ஒவ்வொரு பல்கலைக் கழகம், கல்லூரி, பள்ளிகள் நல்ல குடிமக்களை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக மெரிக் கார்லண்ட் அண்மையில் நியமிக்கப்பட்டார். நீதிபதி நியமனத்தில் குடியரசு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அதிபர் ஒபாமா அளித்த பதிலில் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற நியமனத்தில் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து 3 நீதிபதிகளின் பெயர்களை இறுதிசெய்தோம். அவர்களில் மெரிக் கார்லண்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

சட்டம் பயின்றவன், சட்டத்தை நன்கு அறிந்தவன் என்பதால் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை எளிதில் சமாளிக்க முடிந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்துக்கு தமிழரான ஸ்ரீகாந்த் சீனிவாசனின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in