Last Updated : 13 Jan, 2022 07:52 AM

 

Published : 13 Jan 2022 07:52 AM
Last Updated : 13 Jan 2022 07:52 AM

சீனாவின் 'ஜீரோ கோவிட்' கெடுபிடியால் வதைபடும் மக்கள்: இரும்புக் கன்டெய்னர்களில் 20 மில்லியன் பேர் அடைப்பு

பீஜிங்: கரோனா இல்லாத தேசம் என்ற இலக்கை நோக்கி நகரும் சீனா ஒரே ஒரே நோயாளி கண்டறியப்பட்டாலும் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் குவாரன்டைன் முகாம்களுக்கு அனுப்பி கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தி வருகிறது.

சீனாவில் தான் கரோனா நோயாளி முதன் முதலில் கண்டறியப்பட்டாலும் அங்கிருந்துதான் உருவானதா என்ற ஆராய்ச்சிகள் இரண்டாண்டுகளுக்கும் மேல் நீண்டு கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், கரோனா இல்லாத தேசம் என்ற இலக்கை நோக்கி நகரும் சீனா ஒரே ஒரே நோயாளி கண்டறியப்பட்டாலும் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் குவாரன்டைன் முகாம்களுக்கு அனுப்பி கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தி வருகிறது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் இருந்து தற்போது சர்வதேச வலைதளங்களுக்கு கசிந்துள்ளது. அடுத்த மாதம் சீனா குளிர்கால் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

குவாரன்டைன் முகாம்களா? வதை கூடங்களா? இரும்புக் கன்டெய்னர்களில் லட்சக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. "zero Covid" என்ற கோவிட் தடுப்பு நடவடிக்கைக்காகவே அரசு இவ்வளவு சர்வாதிகாரப் போக்குடன் நடப்பதாக மக்கள் வேதனைப்படுகின்றனர். கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர் என விதிவிலக்கில்லாமல் இந்த முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த இரும்புப் பெட்டிக்குள் ஒரு மரக்கட்டில் ஒரு டாய்லட் மட்டுமே இருக்கிறது. இதில் இரண்டு வாரங்கள் வரை அவர்கள் தங்கியிருக்க வேண்டும். அதன் பின்னர் பரிசோதனை செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.

அதேபோல், ஆங்காங்கே தீவிர லாக்டவுன்களையும் சீனா அமல்படுத்தி வருகிறது. சீனாவில் லாக்டவுன் என்றால் அதில் சிறு தளர்வு கூட காண முடியாது. அண்மையில் கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனை செல்லக்கூட கெடுபிடி விதிக்கப்பட்டதால் அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. மக்கள் லாக்டவுனுக்கு அஞ்சி அத்தியாவசியப் பொருட்களை பயத்தில் வாங்கிக் குவிக்கும் பேனிக் பையிங் அதிகரித்துள்ளது.

ஒரு குடியிருப்பில் ஒருவருக்குக் கரோனா உறுதியானாலும் கூட ஒட்டுமொத்த குடியிருப்பையும் அப்புறப்படுத்தி முகாமுக்குக் கொண்டு சென்று விடுகின்றனர். சில நேரம் நள்ளிரவில் கூட இந்த அப்புறப்படுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது என்று மக்கள் வேதனையுடன் பகிர்ந்துள்ளனர்.
டியான்ஜின் நகரில் மக்களை முகாம்களுக்கு அழைத்துச் செல்ல அணிவகுத்து நிற்கும் பேருந்துகளின் வீடியோவை ஒரு நபர் பகிர்ந்துள்ளார்.

20 மில்லியன் பேர் அடைப்பு: இப்போதைய நிலவரப்படி சீனாவில் 20 மில்லியன் மக்கள் இதுபோன்ற இரும்புப் பெட்டிகள் கொண்ட குவாரன்டைன் முகாம்களில் அடைப்பட்டுக் கிடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் ஜீரோ கோவிட் நடவடிக்கை மீது உலக நாடுகளின் பார்வை திரும்பியுள்ளது. இதனால் சீனா கடும் விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x