

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நீண்ட நாளாக நீடித்த ஊரடங்கு கரோனா குறைந்துள்ளதால் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ மெல்போர்னில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா பரவல் தீவிரமாக இருந்தது. இதன் காரணமாக பல மாதங்களாக அங்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் மெல்போர்னில் கரோனா குறைந்துள்ளது இதனால் நீண்ட நாட்களாக நீடித்த ஊரடங்கு முடிவுக்கு வருகிறது” என்றார்.
80% மக்களுக்கு முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தியப் பிறகுதான் முழுமையான தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.மெல்போர்னில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டால் உலகின் நீண்ட நாள் ஊரடங்கு முடிவுக்கு வரும்.
சமூக இடைவெளியும், தடுப்பூசியுமே கரோனா பரவலைத் தடுக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பூசியைச் செலுத்த பல்வேறு உலக நாடுகள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி உள்ளன.
உலகம் முழுவதும் 24 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.