ஆப்கன் சிறுமிகள் விரைவில் கல்வி பெற அனுமதிக்கப்படுவார்கள்; தலிபான்கள் உறுதியளிப்பு: யுனிசெஃப் தகவல்

ஆப்கன் சிறுமிகள் விரைவில் கல்வி பெற அனுமதிக்கப்படுவார்கள்; தலிபான்கள் உறுதியளிப்பு: யுனிசெஃப் தகவல்
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் விரைவில் மேல்நிலைக் கல்வி பெற அனுமதிக்கப்படுவார்கள் என்று தலிபான்கள் உறுதியளித்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுனிசெஃப் துணைத் தலைவர் ஓமர் அப்தி கூறும்போது, “நான் கடந்த வாரம் காபூலுக்குச் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது தலிபான்களுடனான சந்திப்பில், ஆப்கன் சிறுமிகள் விரைவில் மேல்நிலைக் கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று எனக்கு உறுதி அளித்தனர். ஒரு மாதத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் தலிபான்கள் தெரிவித்தனர்.

27-வது நாளாக ஆப்கனில் சிறுமிகளுக்குக் கல்வி மறுக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக நிலைமையைச் சரிசெய்ய வேண்டுமெனத் தலிபான்களிடம் வலியுறுத்தினோம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அறிவித்தனர்.

ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.

தலிபான்களின் ஆட்சி அச்சம் தரும் வகையில் இருப்பதால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் தலிபான்களின் ஆட்சி, தங்களுக்கு சம உரிமை வேண்டும் என்று இளம்பெண்கள் பலரும் காபூல் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in