பிரான்ஸில் மதகுருமார்களால் 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல்

பிரான்ஸில் மதகுருமார்களால் 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல்
Updated on
1 min read

பிரான்ஸில் கத்தோலிக்க மதகுருமார்களால் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சமீபத்தில் வெளியான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீன் மார்க் சாவ் தலைமையிலான தனியார் விசாரணைக் குழு ஒன்று செவ்வாய்க்கிழமை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில், உலகெங்கிலும் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருவதைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது. பிரான்ஸில் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக, இந்தப் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருகின்றன.

பிரான்ஸில் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த 3,000 பாதிரியார்களும், பிற ஊழியர்களும் இந்தப் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளனர். 1950ஆம் ஆண்டு முதல் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் சிறுவர்கள் ஆவர். அவர்களின் வயது 10 -13க்குள் இருக்கும். ரோமன் கத்தோலிக்க தேவாலயம் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதைவிட தம்மைக் காக்கவே நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் பிரான்ஸ் தேவாலயங்களில் சுமார் 2,900 - 3,200 பீடோபில்கள் (குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள்) இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கை பிரான்ஸ் மக்களிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேவாலயங்கள் தங்களைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in