

ஆப்கானிஸ்தானில் பஞ்ஷிர் பள்ளத்தாக்கை கைபற்றியுள்ளதாக தலிபான்கள் அறிவித்து இருந்தநிலையில் அங்கு மீண்டும் கடும் போர் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் அந்நாட்டின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றினர். தலைநகர் காபூலும் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தது.
அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.
பஞ்ஷிர் மாகாண மக்கள் தலிபான்களை ஏற்கவில்லை. அங்கு தலிபான்களுக்கு எதிராக தீவிர சண்டை நடந்து வந்தது. பஞ்ஷிர் பகுதி போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோது பஞ்ஷிரை அவர்களால் நெருங்க இயலவில்லை.
ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே அந்தக் கோட்டையில் இருந்து வந்தவர். தலிபான்களை நீண்ட காலமாக எதிர்த்து வருகிறார்.
இந்தநிலையில் பஞ்ஷிர் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வந்ததாக தலிபான்கள் அறிவித்தனர்.
முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே தப்பியோடி விட்டதாக தலிபான்கள் தெரிவித்தனர். ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என ஆப்கன் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானின் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் தலிபான்கள் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கு இடையே இன்று மீண்டும் சண்டை தீவிரமடைந்துள்ளது.தேசிய எதிர்ப்பு முன்னணி என்று அழைக்கப்படும் தலிபான் எதிர்ப்பு போராளிகள் இந்த போரை தீவிரப்படுத்தியுள்ளனர்.
காபூலுக்கு வடக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில் பெருமளவு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. இதனை கைப்பற்ற தலிபான்கள் முயன்று வருகின்றனர். ஆனால் அந்த முயற்சியை முறியடிக்க தலிபான் எதிர்ப்பு போராளிகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.