

ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் டெல்டா வைரஸ் காரணமாக தலைநகர் கான்பெராவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. செப்டம்பர் 17ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு நீடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வைரஸ் கட்டுக்குள் வருவதற்கு சில காலம் பிடிக்கும். அதுவரையில் ஊரடங்கை நீட்டிப்பது அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் பலரும் ஆலோசனை தெரிவித்தனர். இந்த நிலையில் கான்பெரா அரசு நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.