

காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள 6 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களையும் திரும்ப பெறும் பணி தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அனைத்து வீரர்களையும் திரும்ப பெற அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் ஆப்கானிஸ் தான் தலைநகர் காபூலையும் தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான் ஆட்சிக்கு அஞ்சி, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்து வருகின்றனர்.
இதில், கடந்த திங்கள்கிழமை, காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானத்தில் இறக்கைகளில் ஏறி பயணித்த சிலர் உயிரிழந்தது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் காபூலில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை விமானத்தை அனுப்பி மீட்டு வருகின்றன. அங்கிருந்து விமானங்களில் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறுவதற்கு ஆகஸ்ட் 31-ம் தேதி காலக்கெடுவாக அமெரிக்கா நிர்ணயித்துள்ளது. அதற்குள் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி தங்கள் நாட்டு குடிமக்களையும் அழைத்து வந்து விட வேண்டும் என்ற இலக்குடன் அமெரிக்கா செயல்படுகிறது.
ஆனால் அந்த தேதியை தள்ளிப்போட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு நேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்தநிலையில் ஆகஸ்ட் 31-ம் தேதி என்ற இலக்கை தாண்டி செயல்பட முடியாது என அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள 6 ஆயிரம் அமெரிக்க வீரர்களையும் திரும்ப பெறும் பணி தொடங்கியுள்ளது. அனைவரையும் விரைவாக அமெரிக்கா அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் காபூல் விமான நிலையில் 31-ம் தேதிக்குப் பிறகு தலிபான்கள் வசமாகும் எனத் தெரிகிறது. அதன் பிறகு அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.