டெல்டாவை கட்டுப்படுத்திய சீனா: ஜூலை மாதத்திற்குப் பின் முதன்முறையாக கரோனா பதிவாகவில்லை

டெல்டாவை கட்டுப்படுத்திய சீனா: ஜூலை மாதத்திற்குப் பின் முதன்முறையாக கரோனா பதிவாகவில்லை
Updated on
1 min read

சீனாவில் கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் முதன்முறையாக நேற்று உள்ளூர் கரோனா தொற்று இல்லை என அந்நாடு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் சீனாவின் கிழக்கே உள்ள நான்ஜிங் நகரில் விமானநிலைய தூய்மைப் பணியாளர்கள் சிலருக்கு கரோனா தொற்று உறுதியானது. நீண்ட காலத்துக்குப் பின்னர் உள்ளூரில் ஏற்பட்ட தொற்றாக இது பார்க்கப்பட்டது.

அதனால், குறுகிய அளவிலான கட்டுப்பாடு பகுதிகள், குறிப்பிட்ட இடங்களில் முழு ஊரடங்கு என கடுமையான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டது. அதன் பிறகு 1200 பேருக்கு தொற்று உறுதியானது. டெல்டா வைரஸால் இந்த பாதிப்பு ஏற்பட்டதும் உறுதியானது. நான்ஜிங், யாங்ஸோ, ஜியாங்சு ஆகிய நகரங்கள் அரசு சுகாதாரத் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தன.

அரசின் துரித நடவடிக்கையால் கடந்த வாரம் கரோனா தொற்று ஒற்றை இலக்கத்துக்கு இறங்கியது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் முதன்முறையாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சீனாவில் உள்ளூரில் கரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.

இருப்பினும் ஷாங்காயின் கடந்த வாரம் சிலருக்கு தொற்று உறுதியானதால் துறைமுகத்தில் உள்ள நூற்றுக்கணக்கானோரை அரசு தனிமைப்படுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நிலவரப்படி 94,652 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கரோனாவுக்கு நாடு முழுவதும் 4,636 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கரோனா உயிரிழப்பில் கடந்த ஜனவரி மாதத்துக்குப் பின் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் டெல்டா வைரஸால் மூன்றாவது, நான்காவது அலை என சென்று கொண்டிருக்கிறது. அதேபோல், இஸ்ரேல், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளும் மூன்றாவது பூஸ்டர் டோஸுக்கு சென்றுவிட்டன. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகக் கடைபிடித்து டெல்டா வேரியன்ட் பரவலைக் கூட சீனா திறம்பட கட்டுப்படுத்தி உலகுக்கு உதாரணம் காட்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in