

அமெரிக்காவில் கரோனா பரவலின் மையமாக ஃபுளோரிடா மாறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாகவே டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,12,279 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 656 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் கரோனா பரவலின் மையமாக ஃபுளோரிடா மாறியுள்ளது. தொடர்ந்து 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 23ஆம் தேதி முதல் ஜூலை 29 தேதிவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியானது.
மேலும், தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஃபுளோரிடா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்டா வைரஸ் தொடர்ந்து பரவினால் அமெரிக்காவில் நிலைமை மோசமாகும் என்று அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.