

விமான விபத்து நிகழ்ந்த பகுதி
சான் மேடியோ அட்டென்கோ: மத்திய மெக்சிகோவில் நேற்று (டிசம்பர் 15) அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் உயிரிழந்தனர் என்று மெக்சிகோ நாட்டின் சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அட்ரியன் ஹெர்னாண்டஸ் தெரிவித்தார்.
மெக்சிகோ நகரத்திலிருந்து மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோலுகா விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தொழில்துறை பகுதியான சான் மேடியோ அட்டென்கோ அருகின் இந்த விமான விபத்து நிகழ்ந்தது. அந்த விமானம் மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் இருந்து புறப்பட்டிருந்தது.
விபத்துக்குள்ளான தனியார் ஜெட் விமானத்தில் எட்டு பயணிகளும், இரண்டு விமானப் பணியாளர்களும் இருந்தனர். ஆனால் விபத்து நடந்த பல மணி நேரங்களுக்குப் பிறகு ஏழு உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டதாக ஹெர்னாண்டஸ் கூறினார்.
அந்த விமானம் ஒரு கால்பந்து மைதானத்தில் தரையிறங்க முயன்றபோது, அருகிலுள்ள ஒரு வணிக நிறுவனத்தின் உலோகக் கூரையில் மோதி, பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியதாகவும், இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஹெர்னாண்டஸ் கூறினார்.
சான் மேடியோ அட்டென்கோ மேயர் அனா முனிஸ், ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தீ விபத்து காரணமாக அப்பகுதியில் இருந்து சுமார் 130 பேர் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.