வேகமெடுக்கும் கரோனா: தாய்லாந்தில் பொது இடங்களில் கூட தடை

வேகமெடுக்கும் கரோனா: தாய்லாந்தில் பொது இடங்களில் கூட தடை
Updated on
1 min read

தாய்லாந்தில் நாளுக்கு நாள் கரோனா அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாய்லாந்து அரசு வெளியிட்ட அறிவிப்பில், “தாய்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10, 082 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 141 பேர் பலியாகி உள்ளனர்.

தாய்லாந்தில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாளும் தாய்லாந்தில் கரோனா தொற்று மற்றும் பலி அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து தாய்லாந்தில் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் கரோனா 2-ம் அலையின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் முற்றாக நீங்கவில்லை. அதேசமயம் ஒருசில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in