

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் முதலில் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். இந்த நிலையில் இரண்டாவது டோஸாக மாடர்னா கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.
இதுகுறித்து ஜெர்மனி ஊடகங்கள் தரப்பில், “66 வயதான ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஏப்ரல் மாதம் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். இந்த நிலையில் இரண்டாவது டோஸாக மாடர்னா கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.
ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்த உறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக அங்கு 60 வயதைக் கடந்தவர்களுக்கு கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் முதல் டோஸாக கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள், இரண்டாவது டோஸாக வேறு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று ஜெர்மனி அரசு வலியுறுத்தியுள்ளது. அதன்படி தற்போது மாடர்னா தடுப்பூசியை மெர்க்கல் போட்டுக்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் முதலே குறைந்ததன் காரணமாக, அங்கு மெல்ல மெல்லத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், கரோனா தடுப்பூசிகளை வேகமாகச் செலுத்தியதால் மூன்றாவது கரோனா அலையை ஜெர்மனி கட்டுப்படுத்தியது. இந்த நிலையில் இவ்வருட இறுதியில் டெல்டா கரோனா வைரஸின் தாக்கம் ஜெர்மனியில் ஏற்படலாம் என்று ஜெர்மனியின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 17 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 38 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.