Published : 21 May 2021 05:02 PM
Last Updated : 21 May 2021 05:02 PM
பிரான்ஸில் கரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், “பிரான்ஸில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு சிறப்பாகச் செயல்பட்டதன் விளைவாக நாட்டில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 141 பேர் பலியாகி உள்ளனர்.
பிரான்ஸில் தொற்று, பலி எண்ணிக்கை குறைந்துள்ளதால் பொது இடங்களில் மக்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுபான விடுதிகள், ஓட்டல்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் இதுவரை 55 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 51 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 32% பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.
இந்த நிலையில் கரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று அறிவியல் விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT