

கரோனா தொற்றைக் குறைந்ததில் தடுப்பூசிகள் மிகப் பெரிய பங்கு வகித்திருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “நாடு முழுவதும் கரோனா தொற்று நம்ப முடியாத அளவு குறைந்துள்ளது. மார்ச் மாதத்திலிருந்த கரோனா தொற்று தற்போது பாதியாகக் குறைந்துள்ளது.
தொற்று குறைந்தத்தில் தடுப்பூசிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. நாம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம். இருப்பினும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ” என்று தெரிவிக்க்ப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கரோனா தடுப்பு மருந்தை வேகமாகச் செலுத்தியதன் காரணமாக அங்கு கரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக 2,000க்கும் குறைவானவர்களே தினசரி கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரிட்டன் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
உலக அளவில் கரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்துவதில் பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், சிலி ஆகிய நாடுகள் முன்னிலை வகித்து வருகின்றன.
உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.