

பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை நாடுகளில் வெறும் 0.3% மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலக நாடுகளிடையே ஏற்றத் தாழ்வு நிகழ்கிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை நாடுகளில் 0.3% மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 82% கரோனா தடுப்பூசிகள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பக்கமே உள்ளன” என்று வருத்தம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகள் அதிகப்படியாக கரோனா தடுப்பு மருந்துகளை வாங்கி உள்ளன. இவ்வாறு இருக்க, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் சென்றடையாத வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் தடுப்பூசிகள் சென்றடைவதில் சம நிலையின்மை நிலவுவதாக பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. கரோனா தடுப்பு மருந்தை பெருவாரியாகக் கொண்டு சென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.