ஆட்சி நிர்வாகத்தில் எனது கைகள் கட்டப்பட்டுள்ளன: இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்

ஆட்சி நிர்வாகத்தில் எனது கைகள் கட்டப்பட்டுள்ளன: இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்
Updated on
1 min read

ஆட்சி நிர்வாகத்தில் எனது கைகள் கட்டப்பட்டுள்ளன என்று இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியபோது, "இலங்கைத் தமிழர்களின் உடனடி தேவைகளை பிரதமர் மோடி அடையாளம் கண்டுள்ளார், இவை குறித்து இலங்கைத் தலைவர்களிடம் அவர் வலியுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது. இனிமேல் இலங்கை அரசுதான் செயல்பட வேண்டும்" என்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லியில் அண்மை யில் சந்தித்துப் பேசியபோது 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

1987-ல் இந்தியா, இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 13-வது சட்டத் திருத்தம் உருவாக்கப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டில் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் ஆகியோரிடம் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த ராஜபக்சே உறுதியளித்தார்.

இதுகுறித்து முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்ந்து பேசியபோது, ஆட்சி நிர்வாகத்தில் எனது கைகள் கட்டப்பட்டுள்ளன, வடக்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள ராணுவப் படைகளால் நிர்வாகத்துக்கு பெரும் தடை ஏற்பட்டுள்ளது.

13-வது சட்டத் திருத்தம் தொடர்பாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும், வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் மட்டுமன்றி நாடு முழுவதும் ராணுவ தலையீடு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது, தற்போதைய நிலையில் வெறுப் பும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சி யுள்ளன, எனினும் முழுமையாக நம்பிக்கையை இழக்கவில்லை என்றார்.

வடக்கு மாகாண கவுன்சில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கூறியபோது, எங்களிடம் எந்த அதிகாரமும் இல்லை, நிதி பற்றாக்குறையும் ஆள் பற்றாக் குறையும் பெரும் சவாலாக உள்ளன என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடத்தப் படவில்லை. இப்போது நாங்கள் வெற்றி பெற்ற பின்னர் போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. வடக்கு மாகாணத்தில் ஆளுநரே அதிக அதிகாரம் படைத்தவராக உள்ளார். அவர்தான் அதிகார மையமாக செயல்படுகிறார். அரசு ஊழியர்கள் அவருக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்வர் விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டுகளை வடக்கு மாகாண சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா மறுத்துள்ளார்.

அதிபர் ராஜபக்சே அரசில் அங்கம் வகிக்கும் ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி யின் மூத்த தலைவரான அவர் கூறியபோது, வடக்கு மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட 120 தீர்மானங்களில் 90 சதவீதம் ஆட்சி நிர்வாகத்துக்கு தொடர்பில்லாதவை என்று குற்றம் சாட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in