

மியான்மரில் ராணுவ ஆட்சிக்குப் பிறகு கரோனா பாதிப்பு ஒற்றை இலக்க எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.
இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், அண்மையில் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. மேலும், ஆங் சான் சூச்சி மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. மியான்மர் நாட்டில் தற்போது அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் மியான்மரில் ராணுவ ஆட்சிக்குப் பிறகு, கரோனா பாதிப்பு பெருமளவு குறைந்து ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ஏப்ரல் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 6க்கும் குறைவானவர்களே கரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மியான்மரில் கரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. மனித உரிமைகள் அமைப்பின் குற்றச்சாட்டுக்கு ராணுவம் தரப்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.
மியான்மரில் இதுவரை 1,42,610 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,32,879 பேர் குணமடைந்துள்ளனர். 3,206 பேர் பலியாகியுள்ளனர். 1,31,879 பேர் குணமடைந்துள்ளனர்.