மியான்மரில் ராணுவத்துக்கு எதிரான போராட்டம்: இதுவரை 701 பேர் பலி

மியான்மரில் ராணுவத்துக்கு எதிரான போராட்டம்: இதுவரை 701 பேர் பலி
Updated on
1 min read

மியான்மரில் ராணுவத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 701 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அனடோலு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “மியான்மரில் ராணுவத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. பாகாவில் வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தில் 80க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதுவரை மியான்மரில் நடந்து வரும் போராட்டத்தில் 701 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3,021 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், அண்மையில் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. மியான்மர் நாட்டில் தற்போது அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in